உலகம் செய்தி ‘இஸ்லாம் பயம்’ அதிகரிப்பு: இம்ரான் கான் ஒப்புதல்

”நியூயார்க் இரட்டை கோபுர கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின், உலகளவில் இஸ்லாத்தின் மீதான பயம் அதிகரித்து விட்டது,” என இம்ரான் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: இஸ்லாத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை. கிரிக்கெட் வீரனாக இருந்த போது, நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். அப்போது, அந்த நாடுகளில் இஸ்லாத்தின் மீது வெறுப்போ, பயமோ மற்ற மதத்தினரிடம் இருந்தது இல்லை.

ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001 செப்., 11ல், இரட்டை கோபுரத்தின் மீது நடந்த தாக்கதலுக்குப் பின், சர்வதேச அளவில் இஸ்லாம் மீதான பயம் அதிகரித்துள்ளது. இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் இணைத்து பேசப்படுகிறது. பயங்கரவாதத்துக்கும், இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், இதை தடுக்க முஸ்லிம் நாடுகள் தவறிவிட்டன. இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.