இந்திய வங்கிகள்: கடன் ‘ரைட் ஆஃப்’ என்பது பாமரர்களின் பணத்தை கொள்ளையடிப்பதா?
இது போன்ற செய்திகள், செய்தித்தாள்கள், டிவி, ஆன்லைன் போர்டல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வருகின்றன.
அது அப்படி இல்லை.
இந்த மூன்று நட்சத்திரங்களின் இடத்தில் ஏதேனும் ஒரு வங்கியின் (அரசு அல்லது தனியார்) பெயரை நிரப்பி, அதை தேடினால் இதற்கான விடை கிடைக்கும்.
கடன் ரைட் ஆஃப் (கணக்கேட்டில் இருந்து நீக்குவது) விவகாரம் சமீப காலத்தில் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் ரூ.1.29 லட்சம் கோடி கடனை ரைட் ஆஃப் செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமையின் கீழ் கோரப்பட்ட தகவலில் கனரா வங்கி தெரிவித்துள்ளது. (பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வங்கிகள் தங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது, ஒவ்வொரு மூன்றாவது மாதமும் இந்த ரைட் ஆஃப் தொகை பகிரங்கப்படுத்தப்படும்.
இந்த முடிவுகளில்,ரைட் ஆஃப் செய்யப்பட்ட கடன்களின் அளவு குறித்து வங்கிகள் தனது பங்குதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். )
கனரா வங்கியின் இந்தத்தகவல் வெளி வந்ததையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அரசைக் குறிவைக்கத் தொடங்கினர்.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் சமூக வலைதளங்களில் அரசை குறைகூறினர்.அரசு வங்கிகள் கடனை ரைட் ஆஃப் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
கடன் தள்ளுபடி பற்றிய எதிர்க்கட்சிகளின் கூற்றுகள் உண்மையா அல்லது அரசு வேண்டுமென்றே தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகையை மறைக்கிறதா?
கடன் தள்ளுபடியின் இந்த மர்மத்தைத் தீர்க்க, முதலில் வங்கி செயல்முறையை புரிந்துகொள்வோம். வங்கிகள் கடனுக்கு அளிக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.
உண்மையில் வங்கி வணிகமானது வாடிக்கையாளர்களின் பணத்தை டெபாசிட் செய்வதைக் காட்டிலும் கடன் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. இவை இரண்டையும் வங்கி செய்வது அவசியம்.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு கடன் என்பது சொத்தாக இருக்கிறது. ஏனெனில் அவை வங்கிக்கு வட்டிவருமானத்தை தருகின்றன. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடனாக கொடுக்கும் தொகையை, வட்டியுடன் சேர்த்து வசூலிக்கின்றன. மறுபுறம், வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் வங்கியின் பொறுப்பு. வங்கிகள் இந்த தொகையை கடன் வழங்க பயன்படுத்துகின்றன. ஆனால் வங்கிகள் அதை வாடிக்கையாளருக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.
