இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்த வேண்டும்

இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான முறையான கோரிக்கையை மலேசிய அரசுக்கு பிரதமர் மோடியின் அரசு அனுப்பி வைத்தது.

மும்பையைச் சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக் 53. வங்கதேச தலைநகர் டாக்காவில் 2016-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவன், தாம் ஜாகீர் நாயக்கின், பேச்சில் கவரப்பட்டு தாக்குதல் நடத்தியதாக கூறியதையடுத்து, ஜாகீர் நாயக்கை கைது செய்து விசாரணை நடத்துமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது.

இதையடுத்து ஜாமீர் நாயக் மீது பயங்கரவாத செயல்களில் ஈடுபட துாண்டியது மற்றும் கறுப்பு பண மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2016 -ம் ஆண்டு இந்தியா விட்டு வெளியேறி மலேசியாவில் தஞ்சமடைந்தார். அங்கு நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவரை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி இந்தியா கொண்டுவருவதற்கான முறையான கோரிக்கையை மலேசிய அரசுக்கு மத்திய அரசு இன்று அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தன்னை இந்தியா அனுப்பி வைத்தால் விசாரணை நியாயமாக நடைபெறாது என ஜாகீர் நாயக் கருதுவதால் அவரை நாடு கடத்த மாட்டோம் என கடந்த ஆண்டு மலேசிய அரசு மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.