இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் (வயது 37). டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடந்த 2014ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் லீட்சில் நடந்த 4வது நாள் ஆட்டத்தில், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி தொடரை வெல்ல பிரசாத் உதவினார்.

இதனை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் பெருமையுடன் கூறியுள்ளார். இதேபோன்று பிரசாத் பற்றி முன்னாள் கேப்டன் அட்டப்பட்டுவும் புகழ்ந்து கூறியுள்ளார்.

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் புது பந்து கொண்டு பந்து வீச்சை தொடங்க விரும்புவார்கள். ஆனால், பழைய பந்து என்றாலும், பேட்ஸ்மேன் ஒருவர் 150 கடந்து விட்டாலும், பந்து வீச பிரசாத் தயக்கமே காட்டுவதில்லை. ஏனெனில் அணிக்கு வெற்றி கிடைத்திடவே அவர் விரும்புவார். கிரிக்கெட் வீரரிடம் இதுபோன்ற குணங்கள் அரிது என்று புகழ்ந்துள்ளார்.

இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சளார்களில் ஒருவராக திகழ்ந்து வந்த பிரசாத் தோள்பட்டை காயத்தினால் சிறப்புடன் விளையாடுவதில் தடை ஏற்பட்டது. இறுதியாக கடந்த 2015ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அவர் விளையாடினார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை பிரசாத் இன்று வெளியிட்டு உள்ளார்.