இலங்கையில் 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைப்பது தொடர்பான 21-வதுசட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இலங்கையில் கடும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது.
இதற்கு காரணம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே என குற்றம் சாட்டும் பொதுமக்கள், அவர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்ற போது, அதிபருக்கு அனைத்து அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மக்கள் போராட்டம் தீவிரமானதையடுத்து நெருக்கடி முற்றியதால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே புதிய பிரதமராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து இலங்கையில் அதிபரிடம் உள்ள அதிகளவிலான அதிகாரங்களைப் பறித்து, பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 21-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தத்திற்கு பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்லி.யில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு, அமல்படுத்தப்படும் என அமைச்சா் ஒருவா் தெரிவித்தார்.