குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?
குவைத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் சிலரும் உயிரிழந்திருக்கும் நிலையில், அங்கு வாழும் தொழிலாளர்களின் வசிப்பிடச் சூழல் குறித்த கேள்வி எழுந்திருக்கிறது.
குவைத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன?
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட 90 லட்சம் இந்தியர்கள் தங்கிப் பணிபுரிகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள், பட்டயக் கணக்காளர்கள், விஞ்ஞானிகள் துவங்கி, சாதாரண தொழிலாளர்கள் வரை இதில் அடக்கம். வளைகுடா நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களில், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக இந்தியர்கள் தொழிலாளர்களாக பணியாற்றும் நாடு, குவைத்.
கடந்த 2022-ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவு அமைச்சகம் தரும் தகவல்களின்படி கிட்டத்தட்ட 9.24 லட்சம் இந்தியர்கள் குவைத்தில் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 1.25 லட்சம் பேர் தமிழர்களாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது.
