சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முந்தும் தமிழர் – யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?
சிங்கப்பூரில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் 3 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த சிறிய தீவை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் பொது வாக்கெடுப்பாகவே இந்த தேர்தல் கருதப்படுகிறது.
இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்று அடுத்த அதிபராக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. அவர் யார்?
அதிபர் தேர்தலில் தமிழர் உள்பட 3 பேர் போட்டி
சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 வேட்பாளர்களில் முன்னாள் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம்(66) என்பவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. ஆளும் மக்கள் செயல் கட்சியின் தேர்வாக அவர் கருதப்பட்டாலும், அதுகுறித்து அந்த கட்சி சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
1959-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரை ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சியின் இமேஜ், ஊழல் புகார்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.
தர்மன் சண்முகரத்னம் தவிர, காக் சோங் (75), டான் கின் லியான்(75) ஆகிய இருவரும் அதிபர் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.
இந்த 3 பேரில் வெற்றி பெறும் வேட்பாளர், சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா யாகூப்பிடம் இருந்து பொறுப்புகளை ஏற்பார்கள்.
